Monday, 27 September 2010

அறிவிப்பு:

                       நான் என்னுடைய கவிதைகள் மற்றும் கதைகளை மட்டும் இங்கே பதிவிட தீர்மானித்து  உள்ளேன், ஆகவே என்னுடைய மற்றைய பதிவுகளை மற்றொரு வலைப்பூவில் பதிவிட முனைந்து உள்ளேன். . .


நான் படித்ததில் பிடித்த, மற்றும் மிக முக்கியமான தகவல்களை அறிய  http://ahalikai.blogspot.com   என்ற வலைப்போவில படிக்கலாம்.

மற்றுமொரு வேண்டுகோள், வலைப்பூவை வாசிப்போர் தவறாது தங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடவும்.

வாழ்த்துகளுடன்,

அன்பன் கி. சேதுராமன் .

Friday, 6 August 2010

சலனங்கள். . !


பிரிதலும் சேர்ந்திருத்தலும்
நிரந்தரமில்லை என்றுணர்ந்தபோதும்
பிரிதலில் சலனம்
கொள்கின்றோம்  நாம். . !

என்னே சூட்சமக்காரி நீ ?



உன் முகம் பார்த்திராத வரை
       பேசத் துடிக்கின்றேன்
உன் விழி பார்த்த தருணம்
      பேசாமல் ஊமை ஆகின்றேன்
உந்தன் காந்தப் பார்வைதன்னில்
      எம் குரல்வளை சிதறுகின்றதோ..!





மலர்களைக் கூடப் பறிக்க
     மனமில்லாதவள் நீ
என் மனதை மட்டும்
     பறித்துக் கொண்டாயே?

மௌன விரதம் என்கிறாய்
      விழிகளால்  பேசுகின்றாய்

என்னே சூட்சமக்காரியடி  நீ ?

Thursday, 5 August 2010

என் கல்லூரி வாழ்க்கை. . !


தனித்தனியாய் அழகழகாய்
     வெள்ளை வர்ண கட்டிடங்கள்


அழகுக்கழகு சேர்ப்பதற்காய்
    வேலி பின்னப்பட்ட பூங்காக்கள்

மனிதமனத்தை வருடுவதாய்
    ரீங்கார ஓசைபாடும் பறவைகள்

மாணவர்க்கு வழிகாட்டிகளாய்
    வழி அறிந்திராத ஆசிரியர்கள்

ஆசிரியரை சீர் பார்ப்பதற்காய்
    குழுமம் கண்ட நிர்வாகிகள்

இவற்றோடு எதார்த்தமாய்
    குழுமம் குழுமமாய் மாணவர்கள். . !


எதிர்நோக்குகின்ற இலட்சியங்கள்
    ஆர்ப்பரித்து வினாத்தொடுக்க

ஏமாற்றமடைந்த நினைவுகள்
    அழுகுரலில் சீண்டிப் பார்க்க

எதார்த்தமான புன்னகையோடு
     நண்பர்கள் கரம் கோர்க்க

கலக்கமாய் பயணித்தது 
     என் கல்லூரி வாழ்க்கை. . !

பேருந்து நிறுத்தம். . !

ஓர் அந்தி மழைக்காலம் !
மாநகரப் பேருந்தில்
சன்னலோரத்து இருக்கையில்
முன்னவர் சாளரத்தை தாழிட
விசாலமான சாரலில்
நனைந்து கொண்டிருந்தேன் நான். . .

பேருந்து நிறுத்தம்!
சாலையின் அடுத்த விளிம்பில்
சாரலில் முழுவதுமாய் நனைந்த
பெருமிதத்தோடு அவள்,
அவளை ரசித்ததை
உணர்ந்து விட்டால் போலும்
சட்டென்று பின்வாங்கியவள்
மழைநீர் வடிந்த விழிகளில்
மௌனமொழி பேசினாள். . .

முந்நூறு வினாடிகளே
நீடித்தன என்றபோதும்,
முந்நூறு நாட்கள் கடந்தும்
பசுமையான புரிதலை
நிரப்பிச் செல்கின்றது
அந்தப் பேருந்து நிறுத்தம் . . .

 

Wednesday, 5 May 2010

ஆழித் திருமகள் (கடல்)

பேரிரைச்சல் என்ற போதும்
பேரின்பம் தருபவள்.
தன் பரிணாமங்களினால்
நம்மை பரிணமித்துக் கொள்பவள்.
அவள் என்னை வருடிச் செல்ல
என்னையே இழந்து நிற்கிறேன் நான்.

Sunday, 11 October 2009

வெட்கக்கேடு. . .


வாய்மை என்னவென்றே அறிந்திராதவன்,
வாய்மையே வெல்லும் என்கிறான்.